திருத்தணி: திருத்தணி அருகே வேலஞ்சேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீமங்களாம்பிகை மங்களேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. திருத்தணி அருகே வேலஞ்சேரி கிராமத்தில் ஸ்ரீமங்களாம்பிகை மங்களேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கோயில் வளாகத்தில் யாக குண்டம் வளர்க்கப்பட்டு கோ பூஜை, கணபதி பூஜை உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, நேற்று காலை கோ பூஜையுடன் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதில், வேத விற்பன்னர்கள், வேதமந்திரங்கள் முழங்க புனிதநீரை எடுத்து ச்சென்று கோபுர கலசம் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவில் ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குனர் பாபு, ஆவின் பால்வளத் துறை தலைவர் வேலஞ்சேரி சந்திரன், கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஆர்த்தி ரவி, அதிமுக முன்னாள் கவுன்சிலர் பழனி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஜோதி, கடம்பத்தூர் ஒன்றிய ஆணையர் ராமு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மாலா பழனி, விஏஓ சுரேஷ், அதிமுக பிரமுகர் பாலாஜி, மூத்த வழக்கறிஞர் கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். சிவபக்தர் ஆச்சாரி பாஸ்கர் கும்பாபிஷேகத்துக்கு வந்த பக்தர்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்.